Bob Clements (Bib's Banter) என்னும் எழுத்தாளரின் ஒரு எழுத்தாக்கத்தை தமிழாக்கம் செய்திருக்கிறேன். அவரது அனுமதியுடன் :) - S.Michael
“பாப் இந்த லெந்து காலத்துல எத விட்டுருக்கிறே?”
ஒவ்வொரு வருஷமும் இந்தக் கேள்வியைத் தான் என்னிடம் கேட்பார்கள். லெந்து என்றால் என்னவென்று
தெரியாதவர்களுக்கு - ஈஸ்ட்டர் பண்டிகைக்கு முன்னால் வரும் 40 நாட்கள் (கிறிஸ்தவ விரதம்?!) தான் லெந்து
காலம் எனப்படும்.
“நீ எதையெல்லாம் விட்டுருக்கிறே?” பதிலுக்கு நான் கேள்வி கேட்பேன்.
“தண்ணி”
”இறைச்சி”
”ஸ்வீட்ஸ்”
“சிகரெட்”
இந்தப் பட்டியல் தொடர்ந்து கொண்டே இருக்கும். அதைப் போலவே எனக்குரிய கேள்வியும் தொடரும்...
“நீ எத விட்டுருக்கிறே?”
“என்னையே...”
”உன்னையே விட்டுருகிறியா?”
”ஆமா என்னியத்தான்”
”உன்னிய நீயே விட முடியாது பாப். நீ வேற எதையாவது விடணும். சாக்லேட், குடி, நான் வெஜ் மாதிரி...”
“இல்ல நான் என்னையே விட்டுட்டேன்.”
இப்போது மேல் லோகத்தில் கடவுள் புன்னகைக்க தேவதூதர்கள் சிரித்தனர். “ஆமா பாப் நீ இப்ப எங்க கிட்ட” என்றனர்.
”கடவுளே இது ரொம்ப கஷ்ட்டம் தான்”
“ஆமா எனக்குத் தெரியும் பாப். ஆனா அது தான் ஒரே வழி.”
நான் வளைந்து, நெளிந்து போராடி, ஓடிப் போய், ஒலகத்து இன்பங்கள்ல ஒளிஞ்சுக்கலாம்னு நெனச்சேன்.”
”ஆமா நாங்க மேல இருந்து பாத்துக்கிட்டு தான் இருந்தோம். உன்னையே எரிச்ச விஷயங்களோட நீ போராடிட்டு இருந்ததப் பாத்தோம். உன்னையே கஷ்ட்டப்படுத்தற விஷயங்களுக்கு உள்ளால நீ போய்ட்டு இருந்ததப் பாத்தோம். நீ தப்பிக்கறதுக்காகப் போராடுறதப் பாத்துட்டு இருந்தோம். தூதர்கள் எல்லாம் அழுதுட்டு இருந்தாங்க.”
”நீங்க என்னப் பிடிச்சு தூக்கி விட்டுருக்கலாமே? ஏன் அப்படிச் செய்யல?”
“ஏன்னா நீ தான் உன்னையே விட்டுறணும் மகனே.”
”ஆமா” நான் குதூகலதோடு சொன்னேன், “என்னை நானே விட்டுற வேண்டியதாத் தான் இருந்தது.”
நண்பர்கள் கேட்டார்கள், “உன்னை நீயே விட்டுடுறதுங்கறது என்ன நல்லாவா இருந்தது? குடி, வாழ்க்கையில உள்ள சில இன்பங்கள் இதுங்கள ஒரு மாசத்துக்கு விட்டுடுறது தான் உண்மையிலேயே தியாகம் தெரியுமா?”
“தியாகமா?” நான் சிரித்தேன்.
”ஏன் சிரிக்கிறே?”
“என்னை நானே விடுறப்ப, அது தான் பெருமையான, மகிழ்ச்சியான அனுபவம். நான் எதையும் தியாகம் செய்யல, மேல இருக்கறவரு தான் தன்னோட மேலான தன்மைய தியாகம் பண்ணிட்டு, என்னோட அழுக்குக் கையப் பிடிச்சுக்கறார்.”
எங்கேயோ மேல் உலகத்தில் தேவதூதர்கள் ஒரு குழந்தையைத் தூக்கிப் போட்டு விளையாடுவது போல என்னைப் பந்தாடி, கட்டியணைத்து நேசித்தனர். அவர்கள் சிரித்த சத்தம் கேட்டது.
நம்மை நாமே விட்டுவிடுவது ஒரு அற்புதமான அனுபவம் தான்.